"காருண்ய”சர்க்கார் கவனிக்குமா? குடி அரசு - கட்டுரை - 12.02.1933

Rate this item
(0 votes)

விபசாரத் தடுப்பு மசோதா சென்னையிலும், மதுரையிலும், சீரங்கத்திலும் அமுலுக்கு கொண்டுவரப்பட்டாய்விட்டது. மற்றும் பல ஊர்களிலும் அமுலுக்குக் கொண்டுவர முயற்சிக்கப்படுவதாய் தெரிய வருகிறது. விபசாரத் தடுப்பு மசோதா அமுலுக்கு கொண்டுவர அவசியமாகின்ற பட்டணங்கள் எது எது என்று ஒருவர் அறிய விரும்பினால் அதற்காக கஷ்டப்பட்டு தகவல் தேடவேண்டிய அவசியமே இல்லை. ஒரே ஒரு சுருக்கமான வழியில் கண்டுபிடித்து விடலாம். எப்படி யென்றால் “இந்துமத” ஐதீகப்படி புராண சாஸ்த்திர நிச்சயப்படி, எந்த எந்த ஸ்தலங்கள் புண்ணிய க்ஷேத்திரங்களோ, அதாவது கண்ணால் பார்க்க முக்தி, காதால் கேட்க்க முக்தி, காலால் மிதிக்க முக்தி, நெஞ்சால் நினைக்க முக்தி, அதுமாத்திரமல்லாமல் எந்த எந்த க்ஷேத்திரங்களை கண்டவரைக் கண்டால் முக்தி, கேட்டவரைக் கேட்டால் முக்தி. நினைத்த வரை நினைத்தால் முக்தி, மிதித்த வரை மிதித்தால் முக்தி என்று இருக்கின்றனவோ அந்தந்த க்ஷேத்திரங்களையெல்லாம் குறித்து பட்டியல் போட்டோமேயானால் உடனே விபசாரத்தடுப்பு சட்டம் அமுலுக்கு வர வேண்டிய ஊர்கள் இவ்வளவுதான் என்று கண்டுபிடித்து விடலாம். அந்த முறையில்தான் இப்போது மதுரையும், சீரங்கமும் ஷை சட்டம் அமுலுக்கு கொண்டுவரப்பட வேண்டிய புண்ணிய க்ஷேத்திரங்களாகி விட்டது. 

ஆனால் இப்போது நாம் வெகு அவசரமாக ஒரு புண்ணிய க்ஷேத்திரத்திற்கு, அச்சட்டம் அமுலுக்கு கொண்டுவர வேண்டுமென்று பிரார்த்திக்க வேண்டியவர்களாய் இருக்கின்றோம். அது எது என்றால் அதுதான் மகா புண்ணிய க்ஷேத்திரமாகவும் 12 வருஷத்திற்கு ஒருமுறை மகாமகா புண்ணிய க்ஷேத்திரமாகவும் விளங்கப்போகும் நமது மகாமக க்ஷேத்திரமாகிய கும்பகோணமேயாகும். 

மார்ச்சு மாதத்தில் நடைபெறப்போவதாய்ச் சொல்லப்படும் மகாமக விசேஷம் என்பதற்கு தமிழ்நாட்டில் ஆஸ்பத்திரியில் கிடக்கும் விபசாரிகள் முதல் கொண்டு, கை கால்கள் முடக்கமேற்பட்டு நீட்டவும். குருக்கவும் முடியாமல் அவஸ்தைப்படும் விபசாரிகள் கூட கால்களுக்கும், கைகளுக்கும் தப்பைகள் வைத்துக்கட்டி நிமிர்த்துக் கொண்டு க்ஷேத்திர யாத்திரை போய்க்கொண்டிருக்கிறார்கள். எதற்காக என்கின்ற சந்தேகம் சில தோழர்களுக்கு தோன்றலாம். எதற்காக தாங்கள் இதுவரை செய்த பாவத்தை அந்தக் கிணற்றிலுள்ள மண்ணை , சேற்றை எடுத்து தடவிக் கொண்டால் சகல பாவமும் தீர்ந்து விடுமே என்கின்ற நம்பிக்கைக்காகவா என்றால் அல்லவே அல்ல. இந்த புண்ணிய காலத்தில்” கும்பகோணக் குருக்கள் பார்ப்பனரும், காப்பி கிளப்பு, டிராமா, சினிமாக் கதை காலக்ஷேபக் கம்பெனி மற்றும் சுதேசி வியாபாரி முதலியவர்களும் சம்பாதிக்கும் புண்ணியம் போல், தாங்களும் கடை வைத்துப் புண்ணியம் பணம் சம்பாதிக்கலாம் என்கின்ற எண்ணத்தின் மீதே யாத்திரை புறப்படுகிறார்கள். அந்த ஊரில் ஏற்கனவே ஒரு கூட்டம் உண்டு. சரித்திரகாலம் தொட்டு பேர்பெற்ற கும்பகோண அய்யர்களைக் காப்பாற்றும் விபசாரிகளும், கஞ்சிக்கில்லாத காரணத்தால், உற்சவ காலத்தில் மட்டும் தற்கால சாந்தியாய் விபசாரத்தை மேற்கொள்ளுகின்றவர்களும் சிலர் உண்டு. போதாக்குறைக்கு வெளி ஊர்களிலிருந்தும் பல கூட்டங்கள் புறப்பட்டு இருக்கின்றன. 

ஆகவே அந்த "புண்ணியோதய” காலத்தில் கும்பகோணம் முழுவதும் என்ன காரியத்தில் ஈடுபட்டிருக்கும் என்பதை மனக்கண்ணால் உருவகப் படுத்திப் பார்த்தால் விஷயம் விளங்காமல் போகாது. விபசாரத்தடுப்பு மசோதா என்பது உண்மையாகவே விபசாரத்தைத் தடுப்பதற்கு ஏற்பட்டது என்று இருந்தால் அது கும்பகோண க்ஷேத்திரத்தின் மகா புண்ணியோதய காலமாகிய மகாமக காலத்தில் அல்லாமல் வேறு எதற்கு அவசியமானது என்பது நமக்கு விளங்கவில்லை. ஆகையால் "காருண்ய” சர்க்கார் இந்த விபசாரிகளிடம் காருண்யம் வைப்பதை சிறிது நாளைக்கு ஒத்திப்போட்டு விட்டு, மகாமகத்துக்கு வரும் குட்டிச்சுவர்களான ஆண்களிடம் காருண்யம் வைத்து உடனே டெம்பர்வரியாகவாவது கும்பகோணத்திற்கு விபசாரத் தடுப்பு சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவர விரும்புகின்றோம். 

குடி அரசு - கட்டுரை - 12.02.1933

Read 38 times

நன்றி

வாசிப்பு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பெரியாரின் பொன்மொழிகள் புலவர் நன்னன் அவர்களின் "பெரியார் கணினி " நூலிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. புலவர் நன்னன் அவர்களுக்கு எங்களது  நன்றியை  தெரிவித்துக்கொள்கிறோம்.  

வாசிப்பு
vaasippu.com

+91 99622 02869
support@vaasippu.com

Follow Us On

 

No Rights Reserved. All for Public Use.